கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனியின் மனைவி மற்றும் மகள் உட்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ. கே.பழனிக்கு கடந்த 12-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. கே.பழனியின் மனைவி விஜயா, மகள் திவ்யா, மாமியார் பாளையத்தம்மாள், கார் ஓட்டுநர் டையீஸ் ஆகியோருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விஜயா மற்றும் திவ்யா ஆகியோர் மியாட் மருத்துவமனையிலும், பாளையத்தம்மாள், டையீஸ் ஆகியோர் தண்டலம் சவீதா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.