சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை- மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:

சாத்தான்குளத்தில் கணவன் - மகன் என இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணிக்கு தி.மு.க சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

கரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டுசரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தின் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் - சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.

இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com