கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகளவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், அங்கன்வாடியில் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குத் தேவையான இணை உணவு மற்றும் மதிய உணவை நேரடியாக அவரவர் வீட்டுக்குச் சென்று வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.