தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 13,980 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 600 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இந்த 600 பேரில் ஆண்கள் 405 பேர். பெண்கள் 195 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இருவர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைவாக இறப்பு விகிதம் 0.68% ஆக உள்ளது.
அதேசமயம், இன்று ஒரே நாளில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் 2,16,416 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.