சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 12,929 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் சமீப தினங்களில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் இதுவரை 1,75,484 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,318 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,59,237 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 12,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரத்தில், கோடம்பாக்கத்தில் 1,355 பேரும், அண்ணா நகரில் 1,353 பேரும், தேனாம்பேட்டையில் 1,276 பெறும், திருவிக நகரில் 1,110 பேரும், அடையாறில் 1,062 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.