சென்னை: சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க உத்தரவிடக் கோரி ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் ரயில் சேவையும் முடங்கியது.
இந்த நிலையில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் சிறப்பு விரைவு ரயில்களும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தற்போது புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. ஆவின் வழங்கும் பண்டிகைக் கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை
தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள் தெற்கு ரயில்வே ரயில் சேவையை தொடங்கியுள்ளது. அதுபோலவே, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை உள்பட பொதுப் போக்குவரத்து சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்ததையும் முதல்வர் பழனிசாமி இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
புறநகர் ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு பேருதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை பெரிதும் உதவும் என்றும் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சரை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.