சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கும் இந்திய மருத்துவக் கழகம், அவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தினரும் பிள்ளைகளும் மத்திய அரசிடம் இருந்து ஆறுதலையும் நிவாரணத்தையும் பெறத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, அதுபற்றிய புள்ளி விவரம் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.