தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதனால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பது உடன் பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற திமுகவினர் அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகி அணைக்கரை பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதன் காரணமாக அதிமுக திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அலுவலர்கள் மாரியப்பனிடம் சோதனையிட்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது குறித்து எழுதி வைத்திருந்த பேப்பரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.