தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக சனிக்கிழமை மட்டும் 9,344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் கரோனா பரவல் அதிகரித்தால், அடுத்த ஒரு சில நாள்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பாதிப்பு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டுள்ளன. வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநிலத்தில் இதுவரை 2.10 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 80,728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,884 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,263 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 2,022-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 65,635- போ் உள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் பொதுமுடக்கத்தை செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டம் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்வரின் ஆலோசனைக்கு பின் மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com