/

மானாமதுரை ஆனந்தவல்லி கோயில் சித்திரை திருவிழா: உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு கோயிலின் உள் பிரகாரத்தில் மட்டும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

News image
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் முதல்நாள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

DIN

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு கோயிலின் உள் பிரகாரத்தில் மட்டும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதே காரணத்துக்காக  திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் பெரிய கோயில்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்பின்றி  42 கட்டுப்பாடுளை விதித்து  திருவிழாவை நடத்த அறநிலையத் துறை அனுமதித்துள்ளது. 

இதையடுத்து மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனும் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து பக்தர்கள் உடனடியாக கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் பின்பு இரவு சோமநாதர் சன்னதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் ஸ்ரீ சோமநாதர் சுவாமியும் அலங்காரத்துடன் எழுந்தருளினர்.  பின் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பூஜைகள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் பகுதி பகுதியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படவில்லை.  

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது மண்டகப்படிதாரர்கள் பூஜை முடிந்து கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆனால் இந்தாண்டு கரனோ கட்டுப்பாடுகள் காரணமாக சுவாமி புறப்பாடு கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. 

சோமநாதர் சுவாமி சன்னதியின் உள் சுற்றுப் பிரகாரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் மூன்று முறை வலம் வந்து கோயிலுக்குள் சென்றடைந்தனர். சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. திருவிழா நாள்களில் தினமும் இரவு இதேபோன்று கோயில் உள்பிரகாரத்தில் மட்டுமே சுவாமி புறப்பாடும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.