தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30). இவர் கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானராஜ்(45) என்பவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை வைகை அணைக்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது வைகை அணைப் பகுதியில் உள்ள பழைய பாலம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வைகை அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் ஆற்றில் எங்குத் தேடியும் இருவரின் உடல்களும் கிடைக்கவில்லை.
இரவு நேரம் தேட முடியாத நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். இதையடுத்து இருவரின் உடலையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வைகை அணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.