திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் அதிரடி மீட்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை அதிரடியாக மீட்கப்பட்டது.
நிலத்தை மீட்ட அதிகாரிகள் குழுவினர்.
நிலத்தை மீட்ட அதிகாரிகள் குழுவினர்.

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை அதிரடியாக மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவில் லக்கமநாயக்கன்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பட்டியலைச் சாராத அழகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமான 14.63 ஏக்கர் நிலம் லக்கமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து புதுப்பை செல்லும் வழியில் உள்ளது. இதனை கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக குறிச்சிவலசைச் சேர்ந்த 5 பேர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்த வழக்கில் நிலத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த மூன்று வருடங்களாக ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையர் திருப்பூர் சா.வெங்கடேஷ் தலைமையில் காங்கயம் சரக ஆய்வாளர் பி.அபிநயா, வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயில் செயல் அலுவலர் ரா.தேவிப்பிரியா, வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி குழுவினர் சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, கோயிலின் சுவாதீனத்தில் கொண்டு வந்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்த ஆண், பெண் ஆக்கிரமிப்பாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். மீட்பு குறித்த அறிவிப்புப் பலகையும் அங்கு வைக்கப்பட்டது.

அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் மு.ரத்தினாம்பாள், அ.செந்தில், சொ.சுந்தரவடிவேல், காங்கயம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com