தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சீமான்

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:39 am

DIN

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானப்பயணத்திற்கான செலவுகள் நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், மலேசியாவிலுள்ள இந்தியத்தூதரகமும் நாடு திரும்ப எவ்வித உதவியும் செய்யாததால் அங்குச் சிக்கியுள்ள தமிழர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்; அவர்களது குடும்பத்தினரும் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் வெளிநாட்டுப்பணிக்குச் செல்வதற்காக ஏற்பட்ட கடன் சுமையால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கான செலவையும், கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லா சான்றைப் பெறுவதற்கான செலவையும் அவர்களே செலுத்த வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும். குடும்ப வறுமை காரணமாக வீட்டுவேலை, கட்டிட வேலை உள்ளிட்ட உடல் உழைப்புப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்வியறிவு அதிகம் இல்லாத எளிய மக்கள், அவர்களைப் பணிக்கு எடுக்கும் முகவர்கள் மற்றும் நிறுவனங்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதும், அவ்வாறு சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகத்திலிருந்து எவ்வித உதவியும் வழங்கப்படாது வஞ்சிக்கப்படுவதும் பெருங்கவலையளிக்கிறது.

ஆகவே, இச்சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டுவர பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டுமெனவும், ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெளிநாடுகளில் சிக்கிக்கொள்ளும் தமிழர்களின் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.