கொடநாடு கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று எதிரொலித்துள்ளது. கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் மறுவிசாரணை குறித்து விளக்கம் அளித்த முதல்வர் கூறியது:
“தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றவில்லை என கூறினீர்கள். அதில் ஒன்று தான் இது, இன்னும் பல இருக்கின்றது. கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என தேர்தலின் போது வாக்கிறுதி கொடுத்துள்ளோம். அரசியல் நோக்கம் இல்லாமல், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பழிவாங்கும் என்பது இல்லை.
உரிய விசாரணை நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். வேறு யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த அரசு சட்டத்தின் ஆட்சியை நடத்தும்.”