மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார் முற்றிலும் எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார் திடீரென சாலையிலேயே நின்று கரும் புகை வெளியேறியது.
அதனைத்தொடர்ந்து மளமளவென தீப்பிடித்து கார் எரியத் தொடங்கியது. காற்றின் வேகத்தில் யாரும் அருகில் நெருங்கி செல்லமுடியாத வகையில் முற்றிலும் எரிந்து கார் கருகியது. இதில் காரில் அமர்ந்திருந்த ஓட்டுநர் உடல் கருகி காரிலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த ஓட்டுநர் நாராயணன்
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு மணப்பாறை தீயணைப்புத்துறை விரைந்து சென்றனர், ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.
அதனைத்தொடர்ந்து ஓட்டுநர் இருக்கையில் கருகிய நிலையில் இருந்த உடலை கைபற்றிய போலீஸார் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கருகிய கார் வாடகை கார் என்பதும், உயிரிழந்தவர், திருச்சி தென்னூர் மூலைக்கொள்ளைத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் நாராயணன் என்பதும் தெரியவந்துள்ளது.