பாராலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன்
மாரியப்பன் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது.
ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார்.
இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், முன்பு ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், பதக்கம் வென்ற பிறகு வீடியோ மூலமாக பேசிய மாரியப்பன், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.