முப்படைகளின் தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து குன்னூருக்கு விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக விபின் ராவத் உள்பட ராணுவ உயரதிகாரிகள் 13 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள ராணுவ மருத்துவமனை வழியாக தங்கும் விடுதிக்கு சென்றடைந்தார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விங் கமாண்டர் வருண் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணியளவில் ராணுவ பயிற்சிக் கல்லூரி பொதுமைதானத்தில் விபின் ராவத் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
இதில் முப்படைகளின் தளபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.