முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வருகிற டிச. 17-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும்,
பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும் திமுக அரசைட் கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததை அடுத்து, அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வருகிற டிச. 17-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.