அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தனது இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்று மாசற்ற அலுவலக வாரத்தை திங்கள்கிழமை கடைப்பிடித்தார்.
வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்துவதால் நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் நுண்துகள்கள் மட்டுமே ஆண்டு தோறும் ஏற்படும் உயிர் இழப்புக்கு காரணமாக உள்ளது.
மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது.
எனவே இந்த பருவநிலை மாற்றத்தின் கடும் விளைவுகளிலிருந்து புவியை பாதுகாக்க பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் வளிமண்டலத்திலிருந்து கார்பன் அளவை குறைக்கவும் அனைவரும் போராடி வருகிறோம்.
மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் என கடைப்பிடித்து தனி நபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்து இதன்படி செயல்படுத்தி வருகிறது.
இந்த நடைமுறையை செயல்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி திங்கள்கிழமை தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்தே ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று பணியை தொடங்கினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "இந்த முயற்சியினால் காற்று மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் குறையும், போக்குவரத்து நெருக்கடி குறையும், பொது போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்துவதின் மூலம் சிரமமின்றி அலுவலகம் வரவும் நகரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் இயலும்.
நடப்பது மற்றும் சைக்கிள் ஒட்டுவது போன்ற தூய்மையான போக்குவரத்தின் மூலம் உடல் நலம் கூடுதலாக வலுப்பெறும். உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஒட்டுவது மற்றும் நடப்பதை ஒரு போக்குவரத்தாக பயன்படுத்தினால் உளவியல் தடைகளை எதிர்கொள்ள முடியும். மின் வாகனங்களை படிம எரிபொருளின் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு மாற்றாக உருவாக்கலாம்.
எனவே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் அலுவலர்கள் மற்றும் பார்வையார்களையும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், புதன்கிழமை அலுவலக பணிகள் மேற்கொள்வதன் காரணமாக வாகன பயன்பாட்டினை தவிர்க்க இயலாத சூழ்நிலையில் திங்கள்கிழமை முழுவதும் அலுவலக பணி என்பதால் வாகனம் தவிர்க்கப்படும் என்றார் அவர்.