சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கடம்பூர் மலைப்பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வாரச்சந்தை அருகே செயல்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட் நவீன படுத்துவதற்காக வாரச்சந்தையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இடத்தை தினசரி காய்கறி மார்க்கெட் உடன் இணைத்து விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக வாரச்சந்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வாரச்சந்தை வியாபாரிகள் வாரச்சந்தையை இடமாற்றம் செய்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு சந்தை வளாகத்தில் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வேலூரில் காலமானார்
200 ஆண்டுகளாக சத்தியமங்கலம் வாரச்சந்தை இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ளதால் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வாரச் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் தினசரி காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்துவதற்காக வாரச்சந்தையை இடமாற்றம் செய்து விட்டு ஏற்கனவே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் உடன் இப்பகுதி இணைத்து நவீனப்படுத்தி விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதால் வாரச்சந்தையில் கடை போட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.