/

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான்: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் கரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
மா.சுப்பிரமணியன்
Updated On :28 ஜனவரி 2024, 5:45 am

DIN

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் கரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஒருவருக்கு ஏற்கனவே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

வெளிநாடுகளில் இருந்து வந்த 18,129 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் மரபணு மாற்ற சோதனை செய்ததில் 57 பேருக்கு மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 114 பேரின் மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் நேற்று இரவு மேலும் 60 பேரின் மரபணு சோதனை முடிவுகள் வெளியாகின. அதில், 33 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒருவருக்கு உறுதியான நிலையில் மொத்தம் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 34 பேரில் வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும், கேரளத்திலிருந்து வந்த ஒருவரும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

சென்னை 26, மதுரை 4, திருவண்ணாமலை 2, சேலம் 1, கேரளம் 1 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளன. அனைவரும் நலமாக இருக்கின்றனர். 34 பேரில் 18 வயதுக்குள்பட்ட 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.