சிதம்பரம்: சிதம்பரம் அருகே சனிக்கிழமை இரவு கடலில் படகு கவிழந்ததில் ஞாயிற்றுக்கிழமை காலை இருவரது சடலங்கள் கரை ஒதுங்கியன. இருவர் பத்திரமாக கரை சேர்ந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரை வெள்ளாற்று முகத்துவாரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில் சிங்காரகுப்பத்தைச் சேர்ந்த முருகன் மகன் அப்பு (40), எம்ஜிஆர் திட்டைச் சேர்ந்த அப்பாசு மகன் குணசேகரன் (60), எம்ஜிஆர் திட்டு கிருஷ்ணசாமி மகன் வீர தமிழன் (50), எம்ஜிஆர் திட்டு செல்லப்பன் மகன் தமிழன் (52), ஆகிய 4 நபர்களும் மீன்பிடிக்கச் சென்று கரைக்கு திரும்பும்போது சனிக்கிழமை இரவு கிள்ளை வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்தது. இதில், 4 பேர்களும் கடலில் விழுந்தனர். இதில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவரும் கரை சேர்ந்தனர்.
படகு கவிழ்ந்ததில் நீர் மூழ்கி காணாமல் போன வீர தமிழன், தமிழன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியது. இதனையடுத்து கிள்ளை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.