கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில், புகார் மனு கொடுக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக, காவல் நிலையம் முன்பு புதிய கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனையின் பேரில், புதியக் கட்டடடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். துரை தலைமை வகித்தார்.
பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளர் எம்.எம்.ரஃப் யுதீன், பூதமங்கலம் ஜமாஅத் நிர்வாகி ஷேக், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் வரவேற்றார். புதிய கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை பேசியது,
பொதுமக்கள் அனைவரும் காவலர்களை உங்கள் நண்பனாக, உங்கள் உறவினராக, உங்களில் ஒருவனாக நினைக்க வேண்டும். உங்களுக்காகத்தான் காவலர்களாகிய நாங்கள் இருக்கின்றோம். உங்களின் குறைகளை எங்களிடம் தெரிவிக்கலாம்.
காவல் நிலையத்திற்கு புகார் வழங்க வரும் பொதுமக்களின் வசதிக்காக, ஒரு புதிய கட்டடத்தை கட்டப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட லெட்சுமாங்குடி, பனங்காட்டாங்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஓவர்ச்சேரி, தண்ணீர் குன்னம்,கொத்தங்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, ஓகைப் பேரையூர் உள்ளிட்ட 76 கிராமங்கள் உள்ளன.
அனைத்து கிராமங்களிலிருந்தும் வழக்கு சம்பந்தமாக வருபவர்கள், புகார் கொடுப்பதற்கு வருபவர்கள், திருவிழாக் காலங்களில் வணிகர்களுடன் காவல் துறை சார்பாக ஆலோசனைகள் நடத்துவது உள்ளிட்டவைகளுக்காகவும் காவல் நிலையம் முன்பாக, கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காமராஜ், சிவக்குமார் மற்றும் காவலர்கள் ஏற்பாட்டின் படி, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
பொது மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் வெளியில் வரும் போது, முகக்கவசம் அணிய வேண்டும். கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என்றார்.
விழாவில், திருவாரூர் காவல் ஆய்வாளர்கள் கருணாநிதி, ரமேஷ், சமூக ஆர்வலர்கள் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் காமராஜ், சிவக்குமார் மற்றும் கணேஷ் உள்ளிட்ட காவலர்கள் கவனித்தனர்.