/

நடுக்கடலில் படகு பழுதால் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் மீட்பு  

நடுக்கடலில் படகு பழுதால் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு வெள்ளிக்கிழமை காரைக்கால் துறைமுகம் அழைத்து வந்தனர்.

News image

அன்னி பெசண்ட் ரோந்துக் கப்பல் மூலம் மீட்கப்பட்ட அந்தமான் மீனவர்கள்

Updated On :19 பிப்ரவரி 2021, 4:33 am

DIN


காரைக்கால் : நடுக்கடலில் படகு பழுதால் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு வெள்ளிக்கிழமை காரைக்கால் துறைமுகம் அழைத்து வந்தனர்.

அந்தமான் நிகோபாரில் பதிவு செய்யப்பட்ட மதனா சீ ஃபுட்ஸ் என்கிற பெயரிலான மீன்பிடி படகில் 5 பேர் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த பிப்.16-ஆம் தேதி இரவு காரைக்காலுக்கு 205 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பில் இருந்தபோது, என்ஜின் பழுதாகி நின்றுவிட்டது.

இதுகுறித்து இந்திய கடலோரக் காவல்படையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டது. மேலும் சென்னையை மையமாகக் கொண்ட அன்னி பெசண்ட் ரோந்துக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டது.

Story image

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மதனா சீ ஃபுட்ஸ் என்கிற மீன்பிடி படகு.

தேடுதல் பணியில் என்ஜின் பழுதாகி நின்ற படகு கண்டறியப்பட்டது. ரோந்துக் கப்பலில் சென்ற கடலோரக் காவல்படை வீரர்கள், மீன்பிடி படகில் இருந்தவர்களை காப்பாற்றி கப்பலில் ஏற்றிக்கொண்டனர். பழுதான படகை கயிறு மூலம் கட்டி காரைக்கால் துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை இழுத்து வந்தனர்.

மீனவர்களுக்கு கடலோரக் காவல் படை சார்பில் உணவு வழங்கப்பட்டு, அவர்களது ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. தகவலின்பேரில் காரைக்கால் வந்த படகு உரிமையாளரிடம், மீனவர்கள் 5 பேரும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.