தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.
உத்தமபாளையத்தில் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை திருக்கோயிலில் காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. நெய் விளக்கு, பூ மாலை படைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதே போல, சி.எஸ்.ஐ. , ஆர்.சி உள்ளிட்ட திருச்சபையில் வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வெள்ளிக்கிழமையிலும் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தவிர, ராயப்பன்பட்டி புனித பனிமய மதா பேராலயம் மற்று அனுமந்தன்பட்டி தூய ஆவியார் பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரர் - சிவகாமியம்மன் உடனுறை கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றதில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை சுற்றி வட்டாரத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள சி.எஸ்.ஐ திருச்சபையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.