திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது கரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள தடுப்பூசிகளின் துணையுடன் கரோனா வைரஸ் பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ள நிலையில், பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பேராபத்தைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே, மத்திய அரசிடம் பேசி உருமாறிய கரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வகத்தை சென்னையில் உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது கரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும். இது சரியான நடவடிக்கை அல்ல. திரையரங்குகளில் 50%க்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்று, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எனவே, புதிய கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை நன்றாகக் கழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து புதிய கரோனா பரவலைத் தடுக்க துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.