தைப்பொங்கல்.. தமிழர்களின் உத்தம திருவிழா

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எனவே, தை மாதம் முதல் நாளை தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பொங்கல்.. தமிழர்களின் உத்தம திருவிழா
தைப்பொங்கல்.. தமிழர்களின் உத்தம திருவிழா
Published on
Updated on
3 min read

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எனவே, தை மாதம் முதல் நாளை தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.  புதிதாக விளைந்த அரிசியில் சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுக்கு உதவும் உத்தம நண்பனான மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் கணுப்பொங்கல். தமிழகத்தின் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.

உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்தராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் தை மாதம் என்பது தேவர்களின் சூரியோதய காலமாகிய காலை உதயமாகும். சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்யக்கூடிய தை 1 முதல், ஆனி 30 வரையிலான காலம் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும்.  

இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்தராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது. 

உத்தராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதைச் செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்! சுபகாரியங்கள் உத்தராயண காலத்தில், அதாவது தை முதல் ஆனி வரையிலான மாதங்களில் செய்வது உத்தமமானது என்று கருதப்படுகிறது.

தீமை போக்கும் போகி

பொங்கலின் முதல் நாள் "போகிப் பண்டிகை". இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி புதன்கிழமை போகிப் பண்டிகை வருகிறது. போகியில் வீடுகளுக்கு வெள்ளையடித்து அலங்கரித்து பழைய, தேவையில்லாத பொருள்கள், குப்பைகளை எரித்துத் தூய்மை செய்வர். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும். போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான பண்டிகையாகும். இந்தப்  பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்த சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.

தித்திக்கும் பொங்கல்

ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தை முதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். ஜனவரி 14-ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை. இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர். சமஸ்கிருதத்தில் "சங்க்ரமன" என்றால், "நகரத் துவங்குதல்" என்று அர்த்தம். உலக பயிர்கள் சுபிட்சமாக வளர மழையைத் தருவது சூரியன்.  போகிக்கு மறுநாளான தை முதல் தேதி பொங்கல் திருநாள். அன்று, புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம். பொங்கல் வைத்து, பொங்கி வந்த பொங்கலை தலை வாழை இலையில் இட்டு, முதலில் சூரிய பகவானுக்குப் படைப்பார்கள். அப்போது மஞ்சள், கரும்பு, நெல், வாழை என்று, வயலில் விளைந்தவற்றையும் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தித்திக்கும் பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்வார்கள். 

பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகவும் கொண்டாப்படுகிறது. கிராமங்களில், புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர். பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தினர் மட்டும் உண்ணாமல், வயலில் வேலை செய்தவர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் கொடுத்து மகிழ்வர். எஜமானர்கள் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாள்களுக்கும் உணவு, புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பைக் கௌரவப்படுத்துவர். பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் விழாவாகவும் இது அமைந்துள்ளது.

மாட்டுப்பொங்கல்

பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். ஜனவரி 15-ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த இடமுமான, மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். நிலத்தை உழுவதற்குப் பயன்படுவது மாடுகள். இவர்களை நன்றியுடன் நினைத்து 3 நாள்கள் மக்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர். உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற மனிதனுக்கு உதவியாக இருப்பவை மாடுகள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பசுவையும், அதன் கன்றுவையும் நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றின் கொம்பிலும், கழுத்திலும் சலங்கை, மாலைகள் அணிவித்து அலங்கரித்து பூஜை செய்வார்கள். சுவைமிகு பொங்கலும் உண்ணக் கொடுப்பார்கள்.

கனுப்பொங்கல்

பிராமண சம்பிரதாயங்களில் மாட்டுப்பொங்கன்று காலை கனுப்பொங்கல் எனச் சகோதரிகளால் சகோதரர்கள் நலம் சிறக்க கொண்டாடப்படுகிறது. ”பொங்கலன்று அனைவர் இல்லங்களிலும் செய்யப்படும் சிறப்பு உணவு வகை சர்க்கரைப் பொங்கல். அடுத்ததாக கணுக்கூட்டு. காணும் பொங்கல் (அ) கனுப்பொங்கல் அன்று செய்வதால் கணுக்கூட்டு என்ற பெயர் வந்தது. அப்போது பெண்கள், உடன்பிறந்த சகோதரர்கள் நலம் வேண்டி, காக்கைக்கு கனுப்பிடி வைப்பார்கள். சாதத்தில் மஞ்சள்பொடி சேர்த்து மஞ்சள் நிறத்திலும், சாதத்துடன் சுண்ணாம்பு –   மஞ்சள்பொடி சேர்த்து சிவப்பு நிறத்திலும், வெறும் சாதமாக வெள்ளை நிறத்திலும் சிறிய உருண்டைகள் செய்வார்கள். இந்த உருண்டைகள் மற்றும் முதல் நாள் செய்த சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை மஞ்சள் இலையில் போட்டு, குளக்கரை அல்லது மொட்டை மாடியில் வைப்பார்கள். பிறகு சாமி கும்பிட்டு, பெரியோர்களிடம் ஆசி பெற்று தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்ச்சாதம் போன்ற கலந்த சாதத்துடன் கணுக்கூட்டை தொட்டுச் சாப்பிடுவது வழக்கம். 

ஏறு தழுவல் எனப்படும் ஜல்லிக்கட்டு

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. 

காணும் பொங்கல்

பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். ஜனவரி 16-ம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கல் பண்டிகையாகம். இது உறவினர்களையும், நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விருப்பமானதாக மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளுக்கோ, அந்த  வாய்ப்பு இல்லாதவர்கள் வயல்வெளிகளுக்கோ குடும்பத்தோடு சென்று மகிழ்கிறார்கள். காணும் பொங்கலுக்கு ‘கன்னிப் பொங்கல்’, ‘கன்றுப் பொங்கல்’, ‘காளையர் பொங்கல்’ என்ற வேறு பெயர்களும் உண்டு.  சில ஊர்களில் ‘மாரியம்மன் பொங்கல்’ என்றும் இதை அழைக்கிறார்கள். தங்களைத் தேடி வரும் எளியவர்களுக்குப் பொருட்களை தானமாக வழங்கி, அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்வதே காணும் பொங்கலின் நோக்கம். இந்த நாளில் எந்தவொரு ஏழை உதவிக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் உதவ வேண்டும்.

ஆகவே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினால் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறையும். எனவெ இந்தப் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழலாம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com