சென்னை: மறைந்த ஞானதேசிகன் இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
த.மா.கா.வின் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உடன் இருந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் ஜன. 15-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.