புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் உணவகத்தில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சமையலறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
கரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள உணவகத்தை சில மாதங்களுக்கு முன் பார்வையிட்டு, உணவு தயாரிக்கும் உபகரணங்கள் சுகாதாரமாக அமைக்க ஏற்பாடு செய்வதற்காக காவலர்களிடம், காவல் ஆணையாளர் கலந்து ஆலோசித்த போது, காவலர்கள் நவீன சமையலறையை அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.17,32,296/- செலவில் புதிதாக நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியினை சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையாளர் அமல்ராஜ் நேரடி கண்காணிப்பில், இணை ஆணையாளர் தலைமையிடம், மற்றும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (22.1.2021) காலை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன சமையலறையை காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.