பவானி: பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாய தொழிலாளி மண் திட்டில் மோதி விழுந்ததில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், அத்தாணி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் முருகேசன் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த இரு ஆண்டுகளாக கரட்டூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை செய்ததற்கான கூலிப் பணத்தை பெற தனது இருசக்கர வாகனத்தில் கரட்டூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கொண்டயம்பாளையம் அருகே வரும்போது சாலையோரத்தில் இருந்த மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.