சசிகலா மால்களை வாங்கிய விவகாரத்தில் பினாமி சட்ட நடவடிக்கை சரிதான்: வருமான வரித்துறை வாதம்

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா, மால்களை வாங்கிய விவகாரத்தில் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரிதான்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா, மால்களை வாங்கிய விவகாரத்தில் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரிதான் என வருமான வரித்துறை தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான நோட்டுக்களை பயன்படுத்தி, சொத்துக்களை வாங்கியதாக, சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. 

இதேபோன்று ரூ.130 கோடி மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மால் உரிமையாளர்கள் கங்கா பவுண்டேஷன், பாலாஜி மற்றும் வி.எஸ்.ஜே தினகரன் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று மாலை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் மால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது என வாதிடப்பட்டது. 

அப்போது வருமான வரித்துறை தரப்பில், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மால் விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததனர். அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் தரகர் மூலம் சசிகலாவின் வழக்குரைஞரை அணுகினர். இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்தது. ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை,  வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டம் பயன்படுத்தியிருப்பது சரியே என வாதிடப்பட்டது. 

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com