சென்னை: பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவை வழங்க கோரிய வழக்கில் மத்திய ,மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை.
மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையல் கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட சத்துணவை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களுக்கு சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சமைக்கப்பட்ட ஊட்டச்சத்துடன் கூடிய உணவு பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள்
சமைக்கப்பட்ட சத்துணவை மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான தங்களது நிலைபாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.