தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
இன்று நெல்லை, தூத்துக்குடி, மதுரை, வேலூர், தென்காசி, விருதுநகர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும், நாளைமுதல் ஜூலை 11 வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.