திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் இணைந்து பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை சரிபாதியாக குறைக்க வேண்டும், உழவர் விரோதச் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மன்னார்குடி மேலராஜ வீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ சார்பு நகரச் செயலர் வி.எம்.கலியபெருமாள், சிபிஎம் சார்பு நகரச் செயலர் ஜி.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் கை.ஜெயபால், கே.கந்தசாமி, நகரக்குழு உறுப்பினர் தனிக்கோடி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.