முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி என் பூமி என் கடமை அமைப்பினர் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நமது நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருக்குவளை அருகே உள்ள கீழவாழக்கரை சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் என் பூமி என் கடமை அமைப்பினர் சார்பில் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. முதற்கட்டமாக 200 மரக்கன்றுகளை நடவு செய்த இவ்வமைப்பினர் நிகழாண்டு இறுதிக்குள் திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட இலக்கு செய்துள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு மேலவாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ். தனபாலன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் டி.செல்வம், சுதா அருணகிரி, சரண்யா பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சமூக ஆர்வலரான எஸ். சண்முக ராஜேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை என் பூமி என் கடமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.அருள்முருகன் செய்திருந்தார்.
உடனே இந்நிகழ்வில் கீழவாழக்கரை சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜி. முருகவேல், என் பூமி என் கடமை அமைப்பின் நிர்வாகிகளான எஸ்.எம்.ஆனந்த், பி.திவாகர், எஸ்.மோகன்ராஜ், கே.ராஜாராம், பி.இளங்கோவன், வீ.மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.