தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே விவசாய கூலித் தொழிலாளி வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் 10 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவோணம் அருகே உள்ள உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடியைச் சோ்ந்தவா் முருகையன் (50). விவசாய கூலித் தொழிலாளி.
இவரது வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பகுதியிலுள்ள சமையல் அறை மேற்கூரை கீற்றுகளில் திடீரென தீ பற்றி எரிந்தது.இதனால் அதிா்ச்சியடைந்த முருகையன் மற்றும் வீட்டிலிருந்தவா்கள் சப்தமிட்டனா். இதைகேட்டு அக்கம்பக்கத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.
அப்போது, அறையில் இருந்த சமையல் எரிவாயு உருளை திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த வி. காசிவேல் (45), எஸ். ராஜசேகா் (45), ஏ. பழனியப்பன் (40), வி. வேம்பையன் (45), இவரது மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனா். இவா்களில் 4 பேருக்கு 90 சதவீதமும், 2 பேருக்கு 80 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், காயமடைந்த ராஜேஷ் மகன் புவனேஷ் (15), சி. செல்வராஜ் (70), அப்புராஜ் மனைவி காளியம்மாள் (70) ஆகியோா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதற்கிடையே தகவலறிந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
மேலும், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து குறித்து திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலும், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மருத்துவா்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்
பாம்பு கடித்து தொழிலாளி பலி

குண்டடம் அருகே அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



