ராசிபுரம்: திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தோ்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஜூலை 28-இல் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்திருந்தனா்.
அதன்படி, ராசிபுரம் நகர அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அதிமுக மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசைக் கண்டிக்கிறோம் என்றும் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்கிறது கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் உள்பட வார்டு கிளை நிரவாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.