/

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பாஜக நடத்தாதது ஏன்?- செந்தில் பாலாஜி கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
அமைச்சர் செந்தில் பாலாஜி
Updated On :28 ஜனவரி 2024, 3:24 am

DIN


தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உச்சகட்டமாக 36 ஆயிரம் பேருக்கு தொற்றிருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமாக தற்போது தொற்றூ பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா பாதிப்பு உச்சபட்சமாக இருக்கும்போதே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது தொற்று குறைந்த காரணத்தினாலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்கரை செலுத்தி வருகிறார்.

மேலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும், 27 மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மதுபானம் வாங்க வருவோர், முகக்கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளி விட்டு தான் வாங்கிச் செல்ல வேண்டும்

குறிப்பாக கட்டாய முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும். முகக்கவசம் அணியாதர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது. அதேப்போல், தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் மதுவினை, தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடத்தல் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கள்ள சாராயம் இல்லாத மாநிலமாக மாறும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது.

மேலும் கடந்த ஆட்சியில் தொற்று அதிகமாக இருந்த போது டாஸ்மாக் திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். கரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்த போதிலும் கர்நாடகாவில் மதுபானகடைகள் தடையின்றி செயல்கிறது. பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் தொற்று குறையாத நிலையில், மதுபான கடைகள் 2 மணி நேரம் விற்பனை செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜக, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழகத்தில் பாஜக அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான் இந்த போராட்டம் நடத்துகிறார்கள்” என செந்தில் பாலாஜி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.