திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எடுத்துக் கூறியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.