தமிழகத்தில் அதிமுகவுடனான பாஜக தொகுதி பங்கீடு விரைவில் முடியும். இரட்டை இலக்கத்தில் பாஜக போட்டியிடும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நடைபெற உள்ள வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் என்ற பேரணியில் கலந்துகொள்வதற்கு செல்வதாக கூறிய அவர், நாளை மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது, அதிமுகவுடனான எங்களுடைய கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும், தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள கட்சியாக பாஜக உள்ளது. திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக சொல்லியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும் திமுக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. திமுக எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது.
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. தற்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்துள்ளது. குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது.
மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கடல் பாசிக்காக தனியாக சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கியது, அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பது பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்வது, சுயசார்பு பாரத திட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு வீட்டிலும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதை எடுத்துக்கூறி தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடங்கிய பின்னர் காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தி கல்லூரி ஒன்றில் பிரதமருக்கு எதிராக விமரிசனங்களை மேற்கொண்டுள்ளார். அது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று முருகன் கூறினார்.