சென்னை: ஜனநாயக திருவிழாவில் வாக்குரிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் சுந்தரேசன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில் தங்களது கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயக திருவிழாவில் வாக்குரிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி 3 கட்சிகளும் இன்றே புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த 3 மனுக்களையும், புதன்கிழமைக்குள் (மார்ச் 17) பரிசீலித்து, பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.