இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர். தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்று அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் பிரச்னைகள் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இத்தகை சூழ்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியையும், விநியோகத்தையும் அதிகரிக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சியில் இயங்கும் பெல் நிறுவனத்திலும், நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்திலும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதின் மூலம் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையெல்லாம் மத்திய அரசின் ஒப்புதலும், ஒரு சில கோடி ரூபாய்களுக்கான இயந்திரங்கள் மட்டுமே. நாடே ஆக்சிஜன் தேவைக்கு கையேந்தி நிற்கும் நிலையில் மத்திய அரசு மேற்கண்ட நிறுவனங்களிலும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்திட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.