ரூ.100 கோடி மதிப்பிலான 15.6 கிலோ ஹெராயின் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்திடம் இருந்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தோஹா வழியாக ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கத்தார் ஏர்வேஸ் 528 என்ற விமானத்தில் பயணம் வந்த இருவர், போதை பொருள்களைக் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பதற்றமாக இருந்ததுடன், மழுப்பலாக பதிலளித்தனர். அவர்கள் இருவரும் தலா இரண்டு இழுபெட்டிகளைத் தங்களுடன் விமானத்தில் எடுத்து வந்திருந்தனர். அவற்றை சோதனையிட்டதில், 15.6 கிலோ அடங்கிய ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.