எடப்பாடி: எடப்பாடி அருகே, சட்டவிரோதமான முறையில் காய்சப்பட்ட 1500 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயத்தினை போலீசார் பறிமுதல் செய்து
அழித்தனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட , கோனமோரிமேடு, இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில், சமூக விரோதிகள் சிலர் கள்ளசாராயம் காய்ச்சி வருவதாக கொங்கணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசன் தலைமையிலான போலீசார், வியாழன் அன்று அப்பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்குள்ள நீரோடை அருகே கள்ளசாராயம் காய்ச்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், அங்கிருந்த 1500 லிட்டர் மதிப்பிலான கள்ளச்சாராயம் மற்றும் அதனை தயார் செய்வதற்கான ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் இது தோடர்பாக எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சிப்பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் அண்ணாதுரை (54) என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள சந்தர்பத்தினை பயன்படுத்தி, இங்குள்ள வனப்பகுதியில் மேலும் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்களா என போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.