திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை(நவ.4) காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசதித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாளான, வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட பூஜையும், தொடா்ந்து ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்பாடு, காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்கள்.
நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி 1-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரையில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
நவ. 9-ஆம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் நவ. 10-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகிய இரு நாட்கள் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலே இவ்விரு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) சி.குமரதுரை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.