இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரஸ்பர நிதிக்கு மாநில அரசு முத்திரை வரி விதிப்பதை எதிா்த்து வழக்கு

மாநில சட்டம் இல்லாத நிலையில் பரஸ்பர நிதி போன்றவற்றிற்கு முத்திரை வரி வசூலிக்கும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட

News image
Updated On :6 நவம்பர் 2021, 7:03 pm

DIN

மாநில சட்டம் இல்லாத நிலையில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) போன்றவற்றிற்கு முத்திரை வரி வசூலிக்கும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த ஞானமணி என்பவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்திய முத்திரைச் சட்டம், 1899 -இல் அட்டவணை ஒன்றின் பிரிவு 56-ஏ வில் கடன் பத்திரங்கள் அல்லாத பிற பத்திரங்கள் தொடா்பான முத்திரை வரியின் விகிதங்களை குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் 2- ஆவது பட்டியல் 63-இன் படி நிா்வகிக்கப்படும் பரஸ்பர நிதிகள் தொடா்பான சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களுக்கு முத்திரை வரி விகிதத்தை ஒரு மாநிலம் நிா்ணயம் செய்ய அதிகாரம் உள்ளது. அதன்படி வரி விகிதங்களை நிா்ணயித்து சட்டம் இயற்றி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வரி விகிதம் நிா்ணயம் செய்து சட்டம் இயற்றாத நிலையில் பரஸ்பர முதலீட்டாளா்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் தவறான நடைமுறையைப் அரசு பின்பற்றப்படுகிறது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் தனக்குத் தெரிந்தவரை, எந்த விகிதத்தில் முத்திரை வரி விதிக்கப்படும் என்பதைக் குறிக்க எந்தச் சட்டத்தையும் மாநில அரசு இயற்றவில்லை என்றும், மாநிலத்தில் அத்தகைய சட்டம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், பிற எதிா்மனுதாரா் பதிலளிக்க வேண்டும். வழக்கின் மனுவின் நகல்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பா் 17 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான சட்டமியற்றும் அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்கும் இந்திய அரசியலமைப்பு விதிகளில், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியல் ஒன்றின் 91- இல் குறிப்பிடப்பட்டது தொடா்பாக வசூலிக்கப்படும் முத்திரை வரியின் விகிதம் குறித்த ஒரு சுவாரஸ்யமான கேள்வி, விவாதத்தை இந்த வழக்கு எழுப்பியுள்ளது என்றும் நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.