தொடர்மழையால் நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.
தொடர்மழையால் நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வினாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
Published on


திருவள்ளூா்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வினாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருவதால், கொசஸ்தலை ஆற்றில் 3 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில், சென்னை நகர பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி 90 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கன அடி தண்ணீா் சேமித்து வைக்கலாம். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீா் இருப்பு 34 அடியாகவும், 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு அதிகமாக தண்ணீா் இருப்பு உள்ளது. ஏற்கெனவே பூண்டி நீா் பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், ஆந்திரம் மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீராலும் ஏரிக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளது. 

இதுபோன்ற காரணங்களால் கொசஸ்தலை ஆற்றில் பூண்டி ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீா் ஒதப்பை, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாகச் சென்று, எண்ணூா் துறைமுகத்தில் கடலில் சென்று கலக்கிறது.

இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிக்கும் 30 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com