தப்பித்தது தமிழகம்: நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

அந்தமான் கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தப்பித்தது தமிழகம்: நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
தப்பித்தது தமிழகம்: நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
Published on
Updated on
2 min read


சென்னை: அந்தமான் கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. ஆனால், இதன் காரணமாக, தமிழகத்தில் தற்போதைக்கு மழை வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் பெரிய அளவில் கனமழை பெய்யாது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நீலகிரி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழ்நிலைகளின்படி, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. இதன்பிறகு, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபா் 27-ஆம் தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதைத்தொடா்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாகி, அடுத்தடுத்து வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக சென்னை அருகே வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட வடதமிழகத்தில் கடந்த 4 நாள்களாக அதி பலத்த மழை பெய்தது. தற்போது, மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். எனினும், இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இது, தென்மேற்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக சனிக்கிழமை உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும். இந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 15-ஆம் தேதி நிலைகொள்ளவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com