தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பயிர்கடன் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலர் வி.கே. சின்னதுரை உள்பட சுமார் 15 விவசாயிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவோணம் வட்டாரத்திலுள்ள ராஜாளி விடுதி, உஞ்சிய விடுதி, சில்லத்தூர், தளிகைவிடுதி, வெட்டுவாக்கோட்டை, பூவாளூர் ஆகிய 6 கூட்டுறவு கடன் சங்கங்களில் யாருக்கும் பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. பயிர்க்கடன் கேட்டுச் செல்லும் விவசாயிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர் எனக்கூறி முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது, ஆட்சியர் பேசுகையில், திருவோணம் வட்டாரத்தில் தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களில் வருகிற வாரம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என்றார் அவர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மேலும், மாவட்டத்தில் யூரியா, பொட்டாஷ், டிஏபி உரங்கள் சரியாகக் கிடைக்கவில்லை என்றும், கடந்த ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இன்னும் ஏராளமான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை எனவும் கூட்டத்தில் புகார்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.