மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உடைகுளம் கண்மாயில் அருகே உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் கண்மாயில் வளர்ந்து வந்த மீன்கள் செத்து மிதக்கின்றன.
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மானாமதுரை உடைகுளம் பகுதியில் தயாபரம் மாரியம்மன் கோயில் எதிரே வறண்டு கிடந்த பாசனக் கண்மாய்க்கு பல பகுதிகளிலிருந்தும் மழைத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கண்மாய் நிரம்பி வருகிறது. இந்த கண்மாய்க்கு அருகேயுள்ள மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கும் சில தனியார் ஆலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் உடைகுளம் கண்மாய் மழைத்தண்ணீர் செல்லும் கால்வாயில் கலப்பதால் மழைநீரும் ஆலைக் கழிவு நீரும் சேர்ந்து உடைகுளம் கண்மாய்க்கு சென்று சேருகின்றன. இதனால் கண்மாய்களில் வளரும் மீன்கள் ரசாயன பாதிப்பு காரணமாக செத்து மிதக்கின்றன.
இந்த மீன்கள் சிப்காட் பகுதியில் இருந்து உடைகுளம் கண்மாய்க்குச் செல்லும் நீர் வழிப்பாதையில் செத்து கிடக்கின்றன.
சிப்காட் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உடைகுளம் கண்மாய்க்கு போய்ச் சேருவதால் அங்கு வளரும் மீன்கள் செத்து விடுவதாக இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.